கம்பம்: வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி கண்ணகி கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா கொண்டாடப்படவிருப்பதை முன்னிட்டு தமிழக - கேரள அதிகாரிகள் கலந்து கொண்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தேக்கடியில் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழக கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பௌர்ணமி நாளில் முழுநிலவு விழா கொண்டாடப்படும். அதன்பேரில் வரும் ஏப்ரல் 16 ஆம் தேதி கண்ணகி கோவில் சித்ரா பௌர்ணமி விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
அதற்காக தமிழக - கேரள மாநிலங்களின் தேனி, இடுக்கி மாவட்ட வருவாய், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தேக்கடியில் உள்ள ராஜீவ்காந்தி அரங்கத்தில் நடைபெற்றது.
தமிழக அரசு தரப்பில் தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ. முரளிதரன், காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே, ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக காப்பாளர் ஆனந்த், தேனி மாவட்ட வன அலுவலர் திவ்யா, இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ், பெரியாறு புலிகள் காப்பக துணை இயக்குனர் சுனில் பாபு மற்றும் காவல், வனம், வருவாய், போக்குவரத்து, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் ஊரக வளர்ச்சித் துறை ஆகிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திலில் குமுளியிலிருந்து கண்ணகி கோயிலுக்கு செல்லும் சாலையை சீரமைப்பது, கோயில் வளாகத்தில் உள்ள செடிகள், முட்புதர்களை அகற்றுவது, பக்தர்களுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தித் தருவது, மருத்துவ முகாம், மக்களை ஏற்றிச் செல்வதற்கு வாடகை ஜீப், கார்கள் அனுமதிப்பது, வாடகை தொகை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
கண்ணகி அறக்கட்டளை சார்பில் பக்தர்கள் வழிபடுவதற்கு நேரத்தை அதிகப்படுத்தவும், பூஜை பொருள்கள் கொண்டு செல்ல வாகனங்களை அனுமதிக்கவும், கோரிக்கை விடுத்தனர், அதிகாரிகளும் பரிசீலிப்பதாக தெரிவித்தனர்.