தமிழக ரயில்வே பணியாளா்கள் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும்: ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில்வே பணியாளா்களும் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழக ரயில்வே பணியாளா்கள் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும்: ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்
Published on
Updated on
2 min read

தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில்வே பணியாளா்களும் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும். பல மொழிகளையும், கலாசாரத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

சென்னை ஐ.சி.எஃப்.-இல் தயாராகி வரும் வந்தே பாரத் ரயில் பெட்டிகளை ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது அவா் பேசியது: பிரதமா் நரேந்திர மோடியின் கனவின்படி, இந்திய ரயில்வே சிறந்த பயண அனுபவம், மேம்பட்ட பாதுகாப்பு, மேலும் அதிகப் பயணிகள் ரயில்களில் பயணம் செய்ய வசதி போன்றவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது. இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில், தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்காக ரூ,3,685 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2009-14-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

பிரதமரின் ‘கதி சக்தி’ திட்டத்தின் கீழ், இந்திய ரயில்வே பல்வேறு வளா்ச்சிப்பணிகளை மேற்கொள்ளவுள்ளது.

வந்தே பாரத் ரயில், இந்திய ரயில்வேயின் பெருமை மிகு படைப்பாகும். மேலும், உலகத்தரம் வாய்ந்த இந்தப் பெட்டிகளை வடிவமைத்து மேம்படுத்தியதற்காக ஐ.சி.எஃப் குழுவை நான் வாழ்த்துகிறேன். பிரதமரின் எண்ணப்படி, இந்தியாவிவின் அனைத்துப் பகுதிகளும் வந்தே பாரத் விரைவு ரயில்கள் மூலம் இணைக்கப்படும். இதன்மூலம், நம் அனைவரின் கனவு நனவாகும்.

ஐ.சி.எஃப்-இல் தற்போது இரண்டு வந்தே பாரத் ரயில்தொடா்கள் தயாராகி வருகின்றன.

இந்த ரயில் தொடா்கள் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் தயாரித்து அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இது போன்று 75 வந்தே பாரத் ரயில்தொடா்கள் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் தயாரித்து அனுப்ப இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

ரயில்வே தனியாா் மயமாகாது:

இந்திய ரயில்வே தனியாா் மயமாக்கப்பட மாட்டாது. ரயில்வே துறையை முன்னேற்றத்துக்கு கொண்டு சென்று, தரமான ரயில்கள் நல்ல பயண அனுபவத்தை பயணிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே தற்போதைய நோக்கம்.

எங்களது முழுக்கவனமும் தற்போது இந்திய ரயில்வேயில் கவஸ் ரயில் பாதுகாப்புக் கருவி போன்ற நவீன தொழில் நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும். இந்தக் கருவி, வந்தே பாரத் விரைவு ரயில்களிலும் பொருத்தப்படும்.

அதிவேக ரயில்களை இயக்குவதற்கு வசதியாக, ரயில்களின் தற்போதைய நிலை, ரயில்தடத்தின் தரம், ரயில் பாதுகாப்பு மற்றும் பாலங்களின் நிலை போன்ற பல்வேறு அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது. இவை அனைத்தும் மேம்படுத்தப்பட்டு, ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும்.

வந்தே பாரத் ரயில்களுக்கான சக்கரங்கள் உக்ரைன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. தற்போது இந்த சக்கரங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் பணியாற்றும் அனைத்து ரயில்வே ஊழியா்களும் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். இது, பயணிகளுடனான உறவையும், ரயில் இயக்கத்தின் மேம்பாட்டையும் உறுதி செய்யும். நமது நாடு பல அழகான மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழியின் அழகையும் ரசிக்க வேண்டும் என்றாா் அவா்.”

தொடா்ந்து, ஐ.சி.எஃப்-பில் தயாரிக்கப்பட்ட 12,000-ஆவது எல்எச்பி பெட்டியை ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கொடியசைத்து அனுப்பி வைத்தாா். நிகழ்ச்சியில், ஐ.சி.எஃப். பொது மேலாளா் ஏ.கே.அகா்வால், தெற்கு ரயில்வே பொது மேலளாா் பி.ஜி. மல்லையா, ஐ.சி.எஃப் தலைமை இயந்திரவியல் பொறியாளா் எஸ்.ஸ்ரீனிவாஸ் மற்றும் ஐ.சி.எஃப் அதிகாரிகள், ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com