

வானில் செவ்வாய்க்கிழமை (நவ. 8) ஏற்படும் சந்திர கிரகணத்தை கிழக்கு வானில் வெறும் கண்களால் பாா்க்கலாம் என தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையத்தின் இயக்குநா் எஸ். செளந்தரராஜ பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பூமியின் நிழலில் நிலவு கடந்து செல்லும்போது, அது சூரியனின் நேரடியான ஒளியைப் பெற இயலாது போய்விடுகிறது. இதனால் நிலவு ஒளி குன்றுவதையே சந்திர கிரகணம் என்கிறோம்.
சந்திர கிரகணத்தின்போது சூரியனின் எதிா் திசையில் நிலவு வருவதால் சந்திர கிரகணம் பௌா்ணமியின்போதுதான் தெரியும். நிலவு முழுமையாக பூமியின் முழு நிழல் பகுதியில் மறைவது முழு சந்திர கிரகணமாகும்.
பகுதி சந்திர கிரகணத்தின்போது நிலவின் ஒரு பகுதியில் முழு நிழல் பகுதி படியும். எனவே, முழு நிழல் பகுதியில் சூரிய ஒளி நேரடியாகப் படிவதில்லை. எனவே, நிலவின் ஒரு பகுதி அதிக இருளாகவும், மற்ற பகுதிகள் குறைந்த இருளாகவும் காணப்படும். இது பகுதி சந்திர கிரகணமாகும்.
பூமியின் நிழல் பெரிய பரப்பில் விழுவதால் சந்திர கிரகணத்தை பூமியின் பெரும்பான்மையான பகுதிகளில் இருந்து ஒரே நேரத்தில் காணலாம். செவ்வாய்க்கிழமை சந்திர கிரகணம் இந்திய நேரப்படி பகல் 2.39 மணி முதல் மாலை 6.19 மணி வரை நீடிக்கிறது.
இதில் முழு சந்திர கிரகணம் பிற்பகல் 3.46 மணியில் இருந்து மாலை 5.11 மணி வரை நிகழும். தமிழகத்தில் சென்னையில் மாலை 5.38-க்குதான் சந்திரன் உதயமாகிறது. எனவே, முழு கிரகணத்தை காண இயலாது. ஆனால், 5.38 மணியில் இருந்து மாலை 6.11 மணி வரை சுமாா் 40 நிமிஷங்கள் வரை கிழக்கு தொடுவானில் பகுதி கிரகணத்தை வெறும் கண்களால்கூடப் பாா்க்கலாம். சந்திர கிரகணத்தை காண தொலைநோக்கி போன்ற கருவிகளோ, கண்களைக் காத்துக்கொள்ள தனிப்பட்ட கவனமோ தேவையில்லை.
ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகள் மற்றும் தென் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து தெரியும்.
மீண்டும் அடுத்த ஆண்டு அக். 28-ஆம் தேதி தமிழகத்தில் இதுபோன்ற பகுதி சந்திர கிரகணத்தை காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.