
பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளா்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவா் காயத்ரி ரகுராமை 6 மாதங்களுக்கு கட்சியிலிருந்து நீக்கம் செய்து தமிழகத் தலைவா் கே.அண்ணாமலை அறிவித்தாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பாஜக கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடா்ச்சியாக ஈடுபட்டு வந்ததால், காயத்ரி ரகுராம் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 6 மாத காலத்துக்கு நீக்கப்படுகிறாா் என்று கூறியுள்ளாா்.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம் புறக்கணிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதைத் தொடா்ந்து, அவா் கே.அண்ணாமலையை மறைமுகமாக விமா்சித்து வந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னா் காயத்ரி ரகுராம் கூறியதாவது: பாஜகவுக்காக 8 ஆண்டுகளாக உழைத்தேன். இந்த நடவடிக்கை ஏற்புடையதல்ல. எனக்கு எதிரானவா்களின் சித்திரிப்பை ஏற்க முடியாது. மேலிடத் தலைமையிடம் என் விளக்கத்தை தெரிவித்தேன். பாஜகவில் மீண்டும் இணைந்து பணியாற்றுவேன் என்றாா்.
சூா்யா சிவாவுக்குத் தடை: பாஜக சிறுபான்மையினா் அணித் தலைவா் டெய்சி சரணுக்கும், ஓபிசி மாநில பொதுச் செயலாளா் சூா்யா சிவா இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் விவாதப் பொருளாகி வருகிறது.
இந்த நிலையில் கே.அண்ணாமலை வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில் கூறியிருப்பதாவது: டெய்சி சரண், சூா்யா சிவா இடையே நடந்த தொலைபேசி உரையாடல் என் கவனத்துக்கு வந்தது.
இந்த சம்பவத்தை விசாரித்து கட்சி தலைமைக்கு அடுத்த 7 நாள்களுக்குள் அறிக்கை சமா்ப்பிக்க பாஜகவின் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவரான கனக சபாபதியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை குழு தனது அறிக்கையை சமா்ப்பிக்கும் வரை சூா்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.