ஒரே நாளில் ஒரு கோடி மதிப்பிலான காதி மற்றும் கைத்தறி துணிகளை விற்பனை செய்யும் நிகழ்ச்சியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடக்கி வைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிலுள்ள நெசவாளர்கள் தரமானதும், விலைக் குறைவானதுமான காதி மற்றும் கைத்தறி துணிகளை கண்கவரும் வடிவமைப்புகளுடன் நெய்வதை தொழிலாகக் கொண்டுள்ளனர்.
பிற நிறுவனங்கள் பெரும் செலவில் கவர்ச்சிமிகு விளம்பரங்களை செய்து வெளிச்சந்தையில் அவர்களின் தயாரிப்புகளை விற்பனை செய்கின்ற நிலையில் வியாபாரப் போட்டிச் சந்தையில், பல கோடி மதிப்பிலான காதி மற்றும் கைத்தறி துணிகளை விற்பனை செய்வதில் சிரமங்கள் உள்ளது.
இதனால் நெசவுத் தொழில் செய்வோர்க்கு ஆண்டு முழுவதும் தொடர் வேலைவாய்ப்பு வழங்க இயலாததால் நெசவாளர்களின் வாழ்வாதாரம்
பாதிக்கப்படுகிறது.
தமிழக அரசின் காதி மற்றும் கைத்தறித் துறையின் கீழ் நெசவுப் பணி செய்யும் நெசவாளர்களால் தயாரிக்கப்பட்ட துணிகள் மற்றும் பொருட்களை, தேசத் தந்தை காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2, 2022 ஞாயிற்றுக்கிழமை இன்று அமெட் பல்கலைக்கழகத்தின் சுமார் 4000 மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வீடு வீடாகச் சென்று விற்பனை செய்யவதென்ற ஒரு சமூக சேவைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இத்திட்டத்தின்படி ஒரே நாளில் குறைந்தது ரூ.1 கோடி மதிப்பிலான காதி மற்றும் கைத்தறி துணிகளுடன், கிராமப் பொருட்களையும் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அமெட் பல்கலைக்கழக வளாகத்தில் 15 விற்பனை வாகனங்களை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்திகொடியசைத்து தொடங்கி வைத்தார்.