பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருள்களை வழங்கிய நிறுவனங்களுக்கே மீண்டும் தமிழக அரசு ஒப்பந்தம் வழங்கியுள்ளது அந்நிறுவனங்களை ஊக்குவிக்கும் செயல் என கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அந்நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் சேர்த்து ஒப்பந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள பல வாக்குறுதிகள், 2022 ஆம் ஆண்டு சுமார் ரூ.1,200 கோடி மதிப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் தரமற்ற பொருள்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன என்பதில் யாருக்கும் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
இதுகுறித்து, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், நடுநிலையாளர்கள் என அனைவரும் கண்டனம் தெரிவித்தனர்.
அனைத்துத் தரப்பிலிருந்தும் கண்டனக் குரல்கள் வர ஆரம்பித்ததும், கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் தேதி, இது குறித்து ஓர் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விரிவான ஆய்விற்குப் பின்னர், தரமற்ற பொருள்கள் வழங்கிய நிறுவனங்கள் மீது கருப்புப் பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் உத்தரவிட்டதாக அரசு செய்திக் குறிப்பு எண். 149 நாள் 21.01.2022-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இதுநாள் வரை எந்த நிறுவனமும் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக தகவல் இல்லை.
இதையும் படிக்க | டாஸ்மாக் செல்லும் வழி! கவனம் ஈர்க்கும் அறிவிப்பு பலகை
இந்நிலையில், அபராதம் விதிக்கப்பட்ட அதே மூன்று நிறுவனங்களுக்கு, அதாவது Arunachala Impex, Integrated Service Point and Natural Food Commercials OM நிறுவனங்களுக்கு பொது விநியோகத் திட்டத்திற்காக 4 கோடி ‘ஒரு லிட்டர் பாமாயில் பாக்கெட்’ விநியோகிப்பதற்கும், ஒரு லட்சம் டன் பருப்பு வழங்குவதற்குமான ஆணை வழங்கப்பட்டு இருக்கிறது. அதாவது, தரமற்ற பொருள்களை விநியோகிக்கும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் செயலில் திமுக அரசு ஈடுபட்டிருப்பது என்பது தெள்ளத் தெளிவாகிறது.
இதற்கு பதிலளித்து உணவுத் துறை அமைச்சர் அவர்கள் நேற்று ஓர் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதில், அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், தரமற்ற பொருள்களை வழங்கிய நிறுவனங்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் தெரிவித்து இருக்கிறார். அரசாங்கம் சொல்வதை செய்யக்கூடியவர்கள் அரசு அதிகாரிகள். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை என்பது ஒரு கண்துடைப்பு நாடகம் தானே தவிர வேறொன்றுமில்லை.
அதேபோல், ஐந்து நிறுவனங்களிடமிருந்து ரூ.7.04 கோடி அபராதம் என்பதும் லாபத்தில் நட்டம் என்பது போலத்தான் உள்ளது. உண்மையிலேயே இந்த அரசுக்கு மக்கள்மீது அக்கறை இருக்குமானால் முதல்வர் அறிவுறுத்தியபடி மேற்படி நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் சேர்த்திருக்க வேண்டும். ஏன் சேர்க்கவில்லை? தயக்கம்? மடியில் கனமில்லை என்றால் வழியில் எதற்கு பயம்?
மேலும், அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்கள் பிற பொருள்கள் வழங்கும் ஒப்பந்தப் புள்ளியில் பங்கெடுத்துக் கொள்ளக்கூடாது என்று எந்த விதியும் இல்லை என்று அமைச்சர் கூறியிருக்கிறார். அமைச்சருடைய கூற்றிலிருந்து, தவறிழைத்த நிறுவனங்களுக்கு தொடர்ந்து கொள்முதல் ஆணை வழங்க வேண்டும் என்பதற்காகவே, கருப்புப் பட்டியலில் சேர்க்காமல் அபராதத்தை மட்டும் அரசு விதித்ததோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுபோன்ற முறைகேடான, நியாயமற்ற, மக்கள் விரோதமான செயல்களில் ஈடுபடுவது தான் ‘திராவிட மாடல்’ போலும்! ஊழலை ஊக்குவிக்கும் செயலில் ஈடுபட்டிருக்கும் திமுக அரசிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தலுக்கு முன்பு, மேடைக்கு மேடை ஊழலைப் பற்றி பேசிய முதல்வர் இப்போது அது குறித்து பேசாதது, அவருக்கும் இதில் தொடர்பு உள்ளதோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
எனவே, முதல்வர் இதற்குரிய விளக்கத்தினை மக்களுக்கு அளிக்க வேண்டும். தரமான பொருள்களை மக்களுக்கு விநியோகிக்கும் வகையில், வெளிப்படையான, ஒளிவுமறைவற்ற நேர்மையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தரமற்ற பொருள்களை வழங்கிய நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும். மேற்படி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஆணையினை ரத்து செய்ய வேண்டு என்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.