மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு முறையாக செயல்படுத்த விடவில்லையா? மத்திய இணை அமைச்சர் குற்றச்சாட்டு
மத்திய அரசின் எந்த திட்டத்தையும் தமிழக அரசு முறையாக செயல்படுத்த விடவில்லை என சேலத்தில் மத்திய ஜல் சக்தி துறை இணை அமைச்சர் விஸ்வேஸ்வர் துடு குற்றச்சாட்டினார்.
சேலம் மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சேலம் வந்த மத்திய ஜல் சக்தி துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர் விஸ்வேஸ்வர் துடு செய்தியார்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, மத்திய அரசு தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை வழங்கி அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்து வருகிறது. ஆனால், எந்த திட்டங்களையும் நிதியையும் தமிழக அரசு முறையாக பயன்படுத்தப்பட வில்லை என்றும், மக்கள் நலனுக்காக மத்திய அரசு திட்டங்களை வகுத்தாலும் அதை தமிழக அரசு மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்கவில்லை என குற்றம் சாட்டினார்.
அதேபோல மத்திய அரசின் திட்டங்களை பெயர் மாற்றி தங்கள் அரசு செய்தது போல மத்திய அரசு நிதியை மற்ற பணிகளுக்கு செலவிடுவதாகவும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிக்க | ஃபேஸ்புக் ஒரு பயங்கரவாத அமைப்பு: ரஷியா அதிரடி அறிவிப்பு
மேலும், தமிழக முழுவதும் 53 சதவீதம் மட்டுமே வீடுகளுக்கு இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளதாகவும், 2022க்குள் முடிக்கப்பட வேண்டும் என இலக்கு நிர்ணயித்தும் இந்த இலக்கு முடிக்கப்படாததால் இந்த திட்டம் 2024 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மலைவாழ் மக்களின் கல்வி மேம்பாட்டுக்காக இந்தியா முழுவதும் 700 சிறப்பு பள்ளிகள் தொடங்கப்பட உள்ளதாகவும், இதில் எட்டு பள்ளிகள் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இரண்டு பள்ளிகள் பணிகள் நிறைவு பெற்று செயல்பட தொடங்கியதாகவும், இரண்டு பள்ளிகள் பணிகள் நடைபெற்று வருவதாகவும் மீதம் உள்ள நான்கு பணிகளுக்கு வேலை இன்னும் தொடங்ககப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்த பள்ளிகளில் சர்வதேச தரத்திற்கு ஏற்ற வகையில் ஆங்கில வழிக் கல்வி கற்பிக்கவும், ஆண்கள்-பெண்கள் என இருபாலரும் சமமாக பயிலும் வகையிலும் அனைவருக்கும் இலவச கல்வி அளிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், மத்திய அரசின் பெரும்பாலான திட்டத்திற்கு மாநில அரசு பங்களிப்பு இல்லாததால் மத்திய அரசின் சார்பில் ஒதுக்கப்பட்ட நிதி திரும்ப பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும், இந்த விஷயத்தில் மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு மத்திய அரசு நிதியை பெற்று தங்கள் பங்களிப்போடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஜல்சக்தி திட்டத்தின் கீழ் இலவச குடிநீர் வழங்குவதற்காக பல்வேறு ஆவணங்கள் கேட்பதாக புகார் எழுந்தது. ஆனால், மின்சார இணைப்புக்கான ஆவணங்கள் இருந்தாலும் கூட அவர்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் மற்ற ஆவணங்களை கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என அறிவுறுத்தி உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அரசு அலுவலகங்களில் தமிழக முதல்வர் மற்றும் பிரதமர் படம் இருக்க வேண்டும். ஆனால். தமிழகத்தை பொறுத்த மட்டில் கருணாநிதி படமும் தமிழக முதல்வர் படம் மட்டுமே உள்ளது. பிரதமர் படம் வைக்காதது துரதிஷ்டவசமானது என்று தெரிவித்தார்.
பொதுவாக மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
பேட்டியின்போது துணைத் தலைவர் கே. பி. ராமலிங்கம், முன்னாள் தலைவர்கள் ஏ. சி.முருகேசன், கோபிநாத் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.