வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், கோடியக்கரை சரணாலயப் பகுதிக்கு வெளிநாடுகளில் இருந்தும் வலசை வரும் பறவைகளின் எண்ணிக்கை புதன்கிழமை (அக்.12) அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளிடையே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்துள்ள கோடியக்கரை வன உயிரின பறவைகள் சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் கூட்டம், கூட்டமாக வந்து செல்வது வழக்கம்.
பறந்து செல்லும் செங்கால் நாரைகள்
ஐரோப்பா, சைபீரியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் ஆண்டுதோறும் 247 பறவை இனங்கள் வந்து செல்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பூநாரைகள்
இந்த நிலையில், வேதாரண்யம் கடலோரக் கிராமங்களில் அவ்வப்போது மழைப் பொழிவு தொடர்ந்து வருகிறது.
செங்கால் நாரை
இந்த நிலையில், நிகழாண்டுக்கான, வடகிழக்குப் பருவக் காலம் தொடங்கும் முன்னேரே பறவைகள் வருவது வழக்கம் போல தொடங்கியுள்ளது.
புதன்கிழமை காலை (அக்.12) முதல் எதிர்பாராத மழைப் பொழிவு இருந்து வரும் நிலையில் பறைவைகளின் எண்ணிக்கையும் திடீரென அதிகரிக்கச் செய்துள்ளது.
கோடியக்கரை சரணாலயத்திற்கு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது காண்போரின் கண்களுக்கு இதமாக காட்சியளிக்கிறது.