காவல்துறை ரோந்துப்பணியை நவீனப்படுத்த ஸ்மார்ட் காவலர் என்ற செயலியை காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு இன்று தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை தலைமையகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சர்வதேச தரத்திலான தொழில்நுட்பத்தை புகுத்தி காவல் துறையை நவீனமயமாக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக காவல் துறையினரின் செயல்திறனை மேம்படுத்தவும், குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்யவும், பராமரிக்கவும், தரவுகளை முறையாகவும், சிறப்பாக கையாளவும் ஸ்மார்ட் காவலர் (E - beat) என்ற புதிய செயலியை இன்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு டிஜிபி அலுவலத்தில் தொடங்கிவைத்தார்.
இதையும் படிக்க- எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு
ஸ்மார்ட் காவலர் செயலி காவல் துறையில் களப்பணியாற்றும் அலுவலர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காகவும், களப்பணியின்போது நிகழும் சம்பவங்களை உடனுக்குடன் பதிவு செய்வதற்காகவும், கள அலுவலர்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டாலோ அல்லது உடனடி உதவிகள் தேவைப்பட்டாலோ அது குறித்த செய்தியினை உடனடியாக உயர் அலுவலர்களுக்கு தெரிவிக்க ஏதுவாக இருக்கும்.
இந்த புதிய செயலி காவல்துறை நிர்வாகத்திலும், பொதுமக்கள் சேவையிலும் ஒரு மைல் கல்லாக அமையும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.