வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் வட்டார விசைத்தறி தொழிலாளர் தீபாவளி போனஸ் ஒப்பந்தம் மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் வெள்ளிக்கிழமை முடிவு செய்யப்பட்டு கையெழுத்தானது.
வெள்ளக்கோவில் வட்டாரத்தில் 7 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 15 ஆயிரம் ஆண், பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
2021 - 22 ஆம் ஆண்டு தீபாவளி போனஸ் பேச்சுவார்த்தை விசைத்தறி உரிமையாளர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இடையே நடைபெற்றது. மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்தாா். வெள்ளக்கோவில் நகர்மன்றத் தலைவர் கனியரசி முத்துக்குமார், திமுக தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் வி.வி.தம்பிதுரை, விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எம்.எஸ்.மோகனசெல்வம் முன்னிலை வகித்தனர்.
இதையும் படிக்க | கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1,337 கோடி அபராதம்
தறி ஓட்டுபவர், பாவு ஓடுபவர் (ஒரு தறிக்கு) ஒரு வருடத்துக்கு ரூ. 1,350, ஒரு மாதத்துக்கு ரூ. 90, இதே போல நூல் சுற்றுபவர் ரூ. 850, ரூ. 70, ஒன்றுக்கும் மேற்பட்ட பட்டறையில் பாவு ஓடுபவர் ரூ. 520, ரூ. 50, பாவு பிணைப்பவர் ரூ. 210, ரூ. 20, மேஸ்திரி ரூ. 210, ரூ. 20, தார் போடுபவர் ரூ. 310, ரூ. 20, நூல் எடுப்பவர், நூல் காயப்போடுபவர், பீஸ் மடிப்பவர் ரூ. 310, ரூ. 20 என உடன்பாடு எட்டப்பட்டு கையெழுத்தானது.
இதில், இந்திய தேசிய காங்கிரஸ் தொழிற்சங்க தலைவர் எம்.வி.பாலு, திமுக தொமுச செயலாளர் எஸ்.சதாசிவம், திமுக நிர்வாகிகள் கே.ஆர்.முத்துக்குமார், கே.சந்திரசேகரன், சி.முருகானந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.