திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா: காப்பு கட்டுதலுடன் தொடக்கம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கந்த சஷ்டி விழா செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 
கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் ஸ்தானிக்கப்பட்டர் செல்லப்பா
கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் ஸ்தானிக்கப்பட்டர் செல்லப்பா
Published on
Updated on
2 min read

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கந்த சஷ்டி விழா செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 

முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என பெருமை பெற்றது திருப்பரங்குன்றம். இங்கு கொண்டாடப்படும் விழாக்களில் கந்த சஷ்டி விழா பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் ஏழு நாட்கள் நடைபெறும். இத்திருவிழா செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

முன்னதாக மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு கந்தசஷ்டி காப்பு கட்டுதல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமிக்கும், சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகர், வள்ளி, தெய்வானைக்கும் காப்பு கட்டப்பட்டது.

தொடர்ந்து விரதம் இருக்கும் பக்தர்களுக்கு சிவாச்சாரியார்கள் காப்பு கட்டினார்கள். முன்னதாக உற்சவர் சன்னதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கும், சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றன.

விழாவினை முன்னிட்டு தினமும் காலையிலும், மாலையிலும் சண்முகார்ச்சனை நடைபெறும். விழாவினை முன்னிட்டு தினமும் சண்முகர் வெள்ளை, பச்சை, சிவப்பு உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

இதேபோல தினமும் மாலை சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் விடையாத்தி சப்பரத்தில் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை ஆறு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 29ஆம் தேதி வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், 30ஆம் தேதி சூரசம்ஹார லீலை, 31ஆம் தேதி சஷ்டி தேரோட்டமும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

கோவிலில் தங்கி விரதம் இருக்கும் பக்தர்கள்: திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகள், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்திலேயே தங்கி விரதம் இருப்பார்கள்.

விரதம் இருக்கும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் தினமும் தினை மாவு, எலுமிச்சம் சாறு, பால் மற்றும் அன்னதானம் வழங்கப்படும். மேலும் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மின்விளக்கு, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.

மேலும் கோயிலில் ஆங்காங்கே பெரிய அளவிலான டிவிகள் வைக்கப்பட்டு சண்முகா அர்ச்சனை, உற்சவர் சன்னதியில் பூஜைகள் உள்ளிட்ட அனைத்து பூஜைகளும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பக்தர்களுக்கான ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் நா.சுரேஷ் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com