அவிநாசி: திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா புதன்கிழமை காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் ஒன்றாகவும், மனநோய் தீர்க்கும் தலமாகவும் விளங்கும் திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயிலில் கந்தர் சஷ்டி விழாவை ஒட்டி புதன்கிழமை காலை கோயிலில் சிறப்பு ஹோமம், மகா அபிஷேகத்துடன் தீபாராதனை நடைபெற்றது.
பிறகு, சுவாமிக்கு காப்புக் கட்டப்பட்டு, சஷ்டி விரதமிருக்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காப்புக் கட்டிக் கொண்டனர். இதைத்தொடர்ந்து கோயிலில் நாள்தோறும் காலை, மாலை சிறப்புப் பூஜைகள் நடைபெற்று, சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறவுள்ளது.
முக்கிய நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை சண்முகநாதர் சுவாமி அன்னையிடம் சக்திவேல் வாங்கி, சண்முகநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சூரர்களை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
திங்கள்கிழமை சண்முகநாதர் தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் மொய் பணம் எழுதுதல், பாத காணிக்கையையடுத்து, வெள்ளையானை வாகனத்தில் வள்ளி - தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி திருவீதி உலா கோலாகலமாக நடைபெறவுள்ளது.