தேவர் தங்கக் கவசத்தை நினைவிட பொறுப்பாளரிடம் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் ஒப்படைத்தார்.
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு 4.5 கோடி ரூபாய் மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அளித்திருந்தார். அந்த கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் வங்கி பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அதிமுகவின் பொருளாளராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த வரை ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவின் போது அவரும், தேவர் நினைவிட அறங்காவலர் காந்திமீனாவும் வங்கிக்கு நேரில் வந்து கையெழுத்திட்டு கவசத்தை பெற்று, குருபூஜை முடிந்த பின்னர் அதனை மீண்டும் வங்கியில் ஒப்படைப்பர்.
அதிமுக இரண்டு அணியாக பிரிந்த நிலையில், தங்கக்கவசத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்பின் கோரிக்கையை நிராகரித்து, ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி, தேவர் நினைவிட பொறுப்பாளர் இணைந்து கவசத்தை பெற்றுக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மதுரை அண்ணாநகர் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளைக்கு வந்த மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் ஆகியோர் கையெழுத்திட்டு கவசத்தை பெற்றனர்.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சாலை வழியாக தங்கக்கவசம் எடுத்துச் செல்லப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அக். 28, 29, 30 ஆகிய மூன்று நாள்கள் குருபூஜை விழா முடிந்து, நவம்பர் 1-ஆம் தேதியன்று மீண்டும் தங்க கவசம் வங்கியில் ஒப்படைக்கப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.