முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி மீதான மாநகராட்சி ஒப்பந்த முறைகேடு வழக்கில், அவரது வீடு உள்ளிட்ட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் இன்று முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் வீடு உள்பட 39 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோா் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், அதிமுக ஆட்சிக் காலத்தில் 3 நிதியாண்டுகளில் தெரு விளக்குகளை மாற்றுவதற்கு, சந்தை விலையை விட எல்இடி விளக்குகளின் விலையை கூடுதலாக நிர்ணயித்ததால் தமிழக அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியிருப்பது உறுதி சய்யப்பட்ட நிலையில் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் இன்று சோதனை நடைபெற்று வருகிறது.
கோவை சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் வீடு, தொண்டாமுத்தூர், வடவள்ளி உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது, சென்னையில்10 இடங்களிலும்,கோவையில் 9 இடங்கள் உள்ளிட்ட 26 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.