மாணவர்களை நல்வழிப்படுத்தும் சென்னை மாநகரக் காவல்துறையின் ‘சிற்பி’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.
‘காவல்துறையினரின் முயற்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் பிரிவு(சிற்பி)’ திட்டத்தை ரூ. 4.25 கோடி மதிப்பில் சென்னை மாநகராட்சியின் 100 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு பள்ளிகளிலும் தலா 50 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தனிச் சீருடை வழங்கப்பட்டு, சமத்துவ உணர்வு, மதசார்பற்ற கண்ணோட்டம் மற்றும் விசாரணை மனப்பான்மையுடன் கூடிய தலைமைப் பண்புகளை வளர்த்தும் வகையில் பயிற்சி வழங்கப்படவுள்ளன.
குற்றச்செயல்களில் ஈடுபடும் மாணவர்களை சிற்பி மாணவர்கள் மூலம் கண்டறிந்து நல்வழிப்படுத்த இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில், அமைச்சர்கள் அன்பில் மகேஷ், சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் இறையன்பு, காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.