ஈரோடு: இந்தியாவில் மதவாத சக்திகளை தடுத்து நிறுத்துவதற்கு மதசார்பின்மையை ஏற்கும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் நினைவு மலர் புத்தக வெளியீட்டு விழா ஈரோடு பெரியார் மன்றத்தில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ். இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டனர்.
இதனையடுத்து விழாவில் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், இந்தியாவில் மதவாத சக்திகளை தடுத்து நிறுத்துவதற்கு மதசார்பின்மையை ஏற்கும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மதவெறி தாக்கங்கங்கள் நாட்டில் அதிகரித்தால் மக்களிடையே பிளவு ஏற்பட்டு நிம்மதி போய்விடும் என்றார்.
இந்தியாவில் மதசார்பின்மையை ஏற்று கொண்ட தலைவர்களை தெரிந்து கொள்ளும் அதேநேரத்தில் மோடி போன்ற தலைவர்களும் இருப்பதை வேறுபடுத்தி குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இவ்விழாவில் ஈரோடு, கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா, மாநகராட்சி மேயர் நாகரத்தினம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கே.ஆர்.திருநாவுக்கரசு, தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் ஸ்டாலின்குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரகுராமன், திமுக நகரச் செயலாளர் சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.