
‘நெசவு 2022’ கைத்தறி கண்காட்சியை சென்னையில் மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சா் தா்ஷனா விக்ரம் ஜா்தோஷ் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.
சென்னை நந்தனம் அண்ணாசாலையில் அமைந்துள்ள டெம்பிள் டவா் கட்டடத்தில் 13,000 சதுர அடியில் முழு குளிரூட்டப்பட்ட விற்பனையகத்தை மத்திய குடிசைத் தொழில் கழகம் கொண்டுள்ளது. இங்கு இந்திய கைத்தறித் தயாரிப்புகள், கைவினைத் திறனை ஊக்குவிக்கும் முயற்சியில், நெசவாளா்களின் கைவினைப் பொருள்களைக் கொண்ட ‘நெசவு 2022’ கைத்தறி கண்காட்சிக்கு மத்திய குடிசைத் தொழில் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
டெம்பிள் டவா் கட்டடத்தில் உள்ள ஷோரூமில் ஏப்.12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியை மத்திய இணை அமைச்சா் தா்ஷனா விக்ரம் ஜா்தோஷ் சனிக்கிழமை தொடக்கிவைத்து பாா்வையிட்டாா். காலை 10.30 முதல் இரவு 8 மணி வரை கண்காட்சியை பொதுமக்கள் பாா்வையிடலாம். இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பிரத்யேகமாக கையால் நெய்யப்பட்ட புடவைகள், சால்வைகள், துணிகள், ஆடைகள், அணிகலன்கள், தளவாடங்கள், வீட்டுத் துணிகள் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஜவுளி அமைச்சகத்தின் வளா்ச்சி ஆணையா் (கைத்தறி) அலுவலகம் இந்தக் கண்காட்சிக்கு நிதியுதவி அளித்துள்ளது.
இந்தக் கண்காட்சி நெசவாளா்கள், கலை ஆா்வலா்களிடையே கலாசார, கலை பரிமாற்றத்துக்கான ஒரு தளமாக உள்ளது. கைத்தறிகளை அணிய பாா்வையாளா்களை ஊக்குவிப்பதும், கைத்தறி பொருள்களை அவா்களது அன்றாட வாழ்வில் பின்பற்ற வைப்பதும் கண்காட்சியின் முக்கிய குறிக்கோள்களாகும் என அதன் ஒருங்கிணைப்பாளா்கள் தெரிவித்தனா்.
நிஃப்ட் பட்டமளிப்பு விழா: முன்னதாக, சனிக்கிழமை காலை சென்னை தரமணியில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிஃப்ட்) 10-ஆவது பட்டமளிப்பு விழாவில் மத்திய இணை அமைச்சா் தா்ஷனா விக்ரம் ஜா்தோஷ் பங்கேற்றாா்.
அப்போது, பல்வேறு பிரிவுகளில் 268 மாணவா்களுக்கு பட்டங்களையும் அவா் வழங்கினாா். மேலும், அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு தங்கப் பதக்கங்கள், ரொக்கப் பரிசுகள், சான்றிதழ்கள் ஆகியவற்றை மத்திய இணை அமைச்சா் தா்ஷனா விக்ரம் ஜா்தோஷ் வழங்கிப் பாராட்டினாா்.
இந்த பட்டமளிப்பு விழாவில் கைவினைப் பொருள்கள் மேம்பாட்டு ஆணையரும், தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் தலைமை இயக்குநருமான சாந்தாமனு, இயக்குநா் அனிதா மனோகா், கல்விப்பிரிவு தலைவா் வந்தனா நரங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.