திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் அடுத்த 45 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை 166.40 மி.க.அடி தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் அணையிலிருந்து 2021-2022 ஆம் ஆண்டிற்கு சாத்தனூர் இடது மற்றும் வலதுபுறக் கால்வாய்களின் ஏரிகளுக்கு நாள் ஒன்றுக்கு முறையே 140 க.அடி/வினாடி மற்றும் 160 க.அடி/வினாடி வீதம் மொத்தம் 300 கனஅடி/வினாடி தண்ணீரை 04.04.2022 முதல் 19.05.2022 வரை 45 நாள்களுக்கு தொடர்ச்சியாக 1166.40 மி.க. அடி தண்ணீர் திறந்து விடவும்,
திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு நிலங்களுக்கு உரிமை நீர் 800 மி.க.அடி நீரினை நீர் பங்கீடு விதிகளின்படி ஏப்ரல் 30-க்குள் விவசாயிகளின் கோரிக்கைப்படி தேவைப்படும்பொழுது மூன்று தவணைகளில் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடவும் அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலுள்ள 12,543 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.