திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயிலில் சித்திரா பொளர்ணமி விழாவையொட்டி 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 16-ம் தேதி சித்திரா பௌர்ணமி விழாவையொட்டி, பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்ய சுமார் 20 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழாவின் பாதுகாப்பிற்காக மாநில காவல்துறை 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் நியமித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.பவன்குமார் ரெட்டி அளித்த பேட்டியில்,
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர், எனவே அதிக கூட்டம் இருக்கும். சித்திரை பௌர்ணமி திருவிழாவின் போது 20 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். எனவே சரியாகக் கண்காணித்து நிலைமையை நிர்வகித்து வருகிறோம்.
மேலும் பக்தர்கள் குறைகளை நிவர்த்தி செய்ய கோயிலுக்குச் செல்லும் பாதையில் 20 உதவி மையங்களும் அமைக்கப்படும். குற்றச் செயல்கள் நடைபெறாத வகையில், கண்காணிக்க 19 தனிப்படைகள் நியமிக்கப்பட்டுள்ளது.
பார்க்கிங் பிரச்னைகளை சமாளிக்க 10 தற்காலிக பேருந்து நிலையங்களும், 35 கார் பார்க்கிங் பகுதிகளும் அமைக்கப்படும். மேலும், அனைத்து எல்லை சோதனைச் சாவடிகளிலும் வாகன சோதனை நடத்தப்படும்.
கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சித்திரா பௌர்ணமி திருநாளில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வரத் தொடங்கியுள்ளனர் என்றார் அவர்.