எடப்பாடி: எடப்பாடி நகர மன்ற கூட்டத்தில் சொத்துவரி உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
நகரமன்ற தலைவர் டிஎம்எஸ் பாஷா தலைமையில் எடப்பாடி நகரமன்ற கூட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்தினை தொடர்ந்து நகரமன்ற அலுவலர்கள் சொத்து வரி உயர்வு குறித்து விவரத்தினை வாசித்தனர். அப்போது அதிமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் நகரமன்ற தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு சொத்துவரி உயர்வை திரும்ப பெறு என கோஷமிட்டனர்.
இதனையடுத்து நகரமன்ற உறுப்பினர் ஏ. எம் முருகன் தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் தமிழக அரசின் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நகரமன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாக தெரிவித்து கூட்டத் தொடரில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த நகரமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஏ. எம் முருகன், எடப்பாடி பகுதி மக்கள் ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துவருவதாகவும், நெசவு தொழிலாளர்கள் நிறைந்த எடப்பாடி பகுதி மக்கள் கடந்த கரோனா பெருந்தொற்று காலத்தில் கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கி தவித்து வரும் நிலையில், திமுக அரசின் இந்த கடுமையான சொத்து வரி உயர்வு சாதாரண ஏழை எளிய மக்களை பெருமளவில் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், எனவே அதனை உடனடியாக ஆளும் திமுக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் அதற்கான எதிர்ப்பினை பதிவு செய்யும் நோக்கிலேயே தாங்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து மன்றத்தில் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்வதாக கூறினார்.
திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள அறிவிப்புகளை தாங்கள் இப்போது மக்களுக்கு நினைவு படுத்துவதாகும், உடனடியாக அரசு இந்த சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என கூறினார்.