விருதுநகர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடி, மின்னல் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நிவாரண நிதியுதவி அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி நகரில் புதிதாக வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
அதே நகரைச் சேர்ந்த சூர்யா(22), ரோசல்பட்டியைச் சேர்ந்த ஜக்கம்மாள்(55), கார்த்திக்(28), முருகன்(24) ஆகியோர் கட்டுமானப் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
இதையும் படிக்க | விருதுநகர்: மின்னல் தாக்கியதில் கட்டட தொழிலாளர்கள் 4 பேர் பலி
இந்நிலையில், அப்பகுதியில் திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. அப்போது, எதிர்பாராத விதமாகக் கட்டடத்தின் மாடியில் இருந்த சூர்யா உள்ளிட்ட 4 பேரும் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டம் நிறைமதி கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது ஜெயக்கொடி, பண்ருட்டி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் ஆகியோரும் இடி, மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இதில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக நிதியுதவி வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.