மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில் வியாழக்கிழமை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 8 ஆவது நாள் விழாவாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்மனும் பிரியாவிடை சமேதமாய் சோமநாதர் சுவாமியும் சர்வ அலங்காரத்தில் கீழப்பசலை கவுல் சுப்ரமணியர் அய்யர் மண்டபத்தில் கண்ணூஞ்சலாகி மாலை மாற்றி அதன் பின்னர் எஸ்.பி.பொன்னம்பலம் பிள்ளை குமாரர்கள் மண்டகப்படியான திருக்கல்யாண மேடைக்கு எழுந்தருளினர். பின்பு திருமணத்திற்கான சம்பிரதாய பூஜைகள் தொடங்கி நடைபெற்று முடிந்ததும் மாலை மாற்றும் நிகழ்வு நடத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து காலை 11.20 மணிக்கு சோமநாதர் சுவாமி சார்பில் ஆனந்தவல்லி அம்மனுக்கும் பிரியாவிடைக்கும் திருமாங்கல்ய நாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதன் பின்னர் அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. கோயிலுக்குள் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கல்யாண வைபவத்தைக் கண்டு தரிசித்தனர்.
திருக்கல்யாண நிகழ்வுகளை சோமாஸ் கந்தன் பட்டர்,ராஜேஷ் பட்டர், தெய்வசிகாமணி என்ற சக்கரைப் பட்டர் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். கோயிலுக்குள் இருந்த திருமணமான பெண்கள் புது திருமாங்கல்ய கயிறு மாற்றிக் கொண்டனர். ஏராளமான பெண்கள் கோயிலில் மாவிளக்கு பூஜை நடத்தி வேண்டுதல் நிறைவேற்றினர். திருக்கல்யாணம் முடிந்ததும் கோயிலில் பக்தர்களுக்கு திருமண விருந்து அளிக்கப்பட்டது.
மேலும் பக்தர்களுக்கு திருமாங்கல்ய கயிறு குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கல்யாணத்தை காண வந்த பக்தர்கள் கோவிலுக்குள் திருமணத்திற்கு மொய் எழுதிச் சென்றனர்.
இதையும் படிக்க | அத்திக்கடவு திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி தீர்த்தக்குட யாத்திரை