ஒரு பக்கம் இந்தித் திணிப்பு என்று கூறி தமிழுக்கு போராடுவது போல் நடிப்பது, மறுபக்கம் இந்தியில் திமுக தலைவரை விளம்பரப்படுத்துவது என திமுக இரட்டைவேடம் போடுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
"முதல்வரைப் பிரபலப்படுத்துவதற்காக இந்தி மொழியை திமுக அரசு பயன்படுத்தி வருவதாக செய்திகள் வந்துள்ளன.
நாடாளுமன்ற ஆட்சி மொழிக் குழுத் தலைவர் என்ற முறையில் ஆட்சி மொழிக் கூட்டத்தில்,"ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தி மொழியைப் பயன்படுத்துங்கள்" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பத்திரிகைகளில் செய்திகள் வந்தன.
இதையும் படிக்க | நாட்டில் புதிதாக 1,150 பேருக்கு கரோனா
இதற்கு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழ்நாடு முதல்வர் "இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல் என வீரவேசத்துடன் விமர்சித்தார்.
தமிழ் மொழியை வளர்க்க வேண்டிய முதல்வர் அதைச் செய்யாமல், தன்னை வளர்த்துக் கொள்ளும் பணியில், தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்ளும் பணியில் இந்தி மொழியை வளர்த்து வருவதாகத் தகவல்கள் வருகின்றன.
முதல்வர் மு.க. ஸ்டாலினை தேசியத் தலைவராகப் பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் குறிப்பாக வட மாநிலங்களில் அவர் புகழ் பரவ வேண்டும் என்பதற்காகவும், சில நடவடிக்கைகள் திமுகவால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒரு பக்கம் இந்தித் திணிப்பு என்று கூறி தமிழுக்குப் போராடுவது போல் நடிப்பது, மறுபக்கம் இந்தியில் திமுக தலைவரை விளம்பரப்படுத்துவது என இரட்டை வேடம் போடுகிறது திமுக. திமுக அரசின் இந்த இரட்டை வேடத்திற்கு அதிமுக சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்."