நாளை (ஏப். 18) முதல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர், தில்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி வரை வெப்ப அலை நிலவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இமாச்சல் மற்றும் ஜம்மு - காஷ்மீரில் ஏப்ரல் 18ஆம் தேதி வரை தற்போதைய வெப்ப அலை தொடர வாய்ப்பு உள்ளது. இதேபோன்று, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் வரும் 20ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு வெப்ப அலை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைக்கு வாய்ப்புள்ள மாநிலங்கள்
நாளை முதல் ஏப்ரல் 22ஆம் தேதி வரை நாட்களுக்கு அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
இதேப்போன்று தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளிலும் வரும் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.