நிலக்கரி தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழகத்தில் மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை வழங்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
நிலக்கரி தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழகத்தில் மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை வழங்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நாடு முழுக்க நிலக்கரியின் கையிருப்பு குறைந்து வருவதால் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், வளர்ச்சியடைந்த மாநிலங்களில் மின்வெட்டு அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் மின் உற்பத்தி நிறுவனங்களுக்குத் தேவையான நிலக்கரியை வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அக்கடிதத்தில், ஒடிசாவில் உள்ள தல்சர் சுரங்கங்களில் இருந்து போதுமான நிலக்கரி தமிழ்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்க வேண்டியது அவசியமானதென்றும், தமிழ்நாட்டின் தொழிற்சாலைகளுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், தற்போது தினசரி நிலக்கரி வரத்து 50,000 மெட்ரிக் டன்கள் அளவிற்கு மட்டுமே உள்ளது அதிகரித்து வரும் கோடைகால மின் தேவையைப் பூர்த்தி செய்ய நிலக்கரி உற்பத்தி போதுமானதாக இருந்தாலும், இரயில்களின் ரேக்குகளின் பற்றாக்குறை காரணமாக, அது துறைமுகங்களுக்கு கொண்டு செல்லப்படுவதில்லை என்று தெரிய வந்துள்ளது, இதன் விளைவாக, தமிழகத்தில் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பு கவலை கொள்ளத்தக்க அளவிற்கு எட்டியுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தைப் பொறுத்தவரை, பாரதீப் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்களுக்கு நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரியை எடுத்துச் செல்ல 22 இரயில்வே ரேக்குகள் தேவைப்படுகின்றன என்றும்,  இருப்பினும், ஒரு நாளைக்கு சராசரியாக 14 ரேக்குகள் மட்டுமே தற்போது ரயில்வேயால் வழங்கப்படுகின்றன என்றும் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
   

இந்த நிலையில், உள்நாட்டு நிலக்கரிப் பற்றாக்குறை காரணமாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தடையற்ற மின் விநியோகத்தைப் பராமரிப்பதற்காக, அதிக விலை கொடுத்து நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது என்றும், இது கரோனாபெருந்தொற்றிற்குப் பிந்தைய பொருளாதாரத்தை கணிசமாக பாதிக்கும் என்றும் குறிப்பிட்டு, இந்த நிலை உடனடியாக கருத்தில் கொள்ளப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பாரதீப் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்களில், எரிபொருள் வழங்கல் ஒப்பந்தத்தின்படி, நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்திட நிலக்கரி அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறும், இந்த நடவடிக்கையால் மட்டுமே தமிழ்நாட்டில் தடையில்லா மின் விநியோகத்தைப் பராமரிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் இந்தியப் பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com