ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மாநிலங்களின் கலாசாரத்தை அறிந்துகொள்ளும் வகையில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 4000 கி.மீ. தொலைவு சுட்டெரிக்கும் வெயிலிலும் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜகன்லால் என்பவர் மகன் பிரதீப்குமார் (21), அங்குள்ள எம்.எஸ்.எல்.யு. கல்லூரியில் பி.ஏ., வரலாறு படித்துள்ளார். இந்திய மாநிலங்களின் கலாசாரம் குறித்து அறிந்துகொள்வதில் ஆர்வம் உள்ள இவர், காஷமீர் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 4 ஆயிரம் கி.மீ. தொலைவு நடைப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார்.
இதனையடுத்து கடந்தாண்டு 30.11.21-ல் காஷ்மீர் மாநிலம் ஜம்முதாவி பகுதியில் தனது பயணத்தைத் தொடங்கிய அவர், கடந்த 5 மாதங்களாக பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகம் வழியாக தமிழகம் வந்துள்ளார். இதனையடுத்து தருமபுரி, சேலம் வழியாக செவ்வாய்க்கிழமை நாமக்கல் மாவட்டம் வந்தடைந்தார்.
தேசிய நெடுஞ்சாலையில், தேசியக்கொடியுடன் சென்ற இவரது பயணம் கேட்டபோது, அனைத்து மாநிலத்திலும், குறிப்பாக தென்னிந்தியாவின் கலாசாரம் குறித்து அறிந்துகொள்ள இந்த பயணம் மேற்கொண்டுள்ளேன். நாளொன்று சுமார் 25 முதல் 30 கி.மீ. தொலைவு நடைப்பயணமாக தனது பயணத்தைத் தொடருவதாகவும், ஆங்காங்கே உள்ள வடமாநிலத்தவர்கள் உள்ள தாபாக்கள், மார்வாடிகள் உதவியுடன் தங்கி உணவருந்திச் செல்வதாகவும், இன்னும் ஒரு மாதத்தில் எனது பயணத்தை கன்னியாகுமரியில் முடித்து, பின்னர் அங்கிருந்து ரயில் மூலம் ராஜஸ்தான் திரும்புவேன் என்றார்.
தமிழகத்தில் உள்ள கோவில்கள், மக்களின் அணுகுமுறை, கிராமிய உடைகள், இட்லி, தோசை போன்ற உணவுகள் என்னைக் கவர்ந்துள்ளன என்றார். மேலும் இந்த பயணத்தை முடித்து நான் இந்திய ராணுவத்தில் இணைந்து நாட்டிற்கு பணியாற்றிட முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். நடைப்பயணத்தைத் தொடர்ந்த ராஜஸ்தான் இளைஞர்.