மே 4-இல் பாடகச்சேரி பைரவ சித்தர் ராமலிங்க சுவாமிகள் சித்தர் பீடத்தில் மகாகும்பாபிஷேகம்

வலங்கைமான் வட்டம் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் (பைரவசித்தர்) சித்தர் பீடத்தில் வரும் 4 ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணி முதல் 10.15 மணிவரை மகாகும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. 
பாடகச்சேரி மகான் ராமலிங்கசுவாமிகள்.
பாடகச்சேரி மகான் ராமலிங்கசுவாமிகள்.

நீடாமங்கலம்: வலங்கைமான் வட்டம் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் (பைரவசித்தர்) சித்தர் பீடத்தில் வரும் 4 ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணி முதல் 10.15 மணிவரை மகாகும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. 

கோவை மாவட்டத்தில் பிறந்து வலங்கைமானுக்கு அருகில் உள்ள பாடகச்சேரியில் தனது 12 வயது முதல் வாழ்ந்தவர் ராமலிங்க சுவாமிகள். வெகுதொலைவில் இருப்பவர்கள் இவரை அழைத்து வருமாறு நாய்களிடம் கூறினால் அதே நாய்களுடன் 
கண் முன்பே தோன்றுவார்.

நூற்றுக்கணக்கான இலைகளில் அறுசுவை உணவு பரிமாறி ராமலிங்க சுவாமிகள் அழைத்தவுடன் எங்கிருந்தோ வந்து இலைகளில் உள்ள உணவுகளை நாய்கள் சாப்பிட்டு விட்டு போகும். இவரை பைரவசித்தர் என்றும் அழைப்பர்.

பாடகச்சேரியில் தங்கி பல அற்புதங்களை நிகழ்த்தியவர் ராமலிங்கசுவாமிகள். வடலூர் வள்ளலார் அருள் பெற்றவர். மக்களின் பசிப்பிணி ,உடற்பிணி தீர்க்கும் பணியோடு கோயில்களை சீரமைக்கும் பணிகளையும் செய்தவர்.

இவர் சீரமைத்த கோயில்களில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இவர் திருவெற்றியூரில் சமாதி அடைந்தார். இவர் சமாதி அடைந்த இடத்தில் ஒரு மடம் உள்ளது.

பெங்களூரு, தஞ்சாவூர், சென்னையில் உள்ள கிண்டி போன்ற ஊர்களில் பாடகச்சேரி சுவாமிகளின் சிலைகள் உள்ளது.

பாடகச்சேரியிலும் ராமலிங்கசுவாமிகளின் தவபீடம் ஒன்றை நிறுவி பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். தற்போது அந்த பீடத்தின் திருப்பணிகள் நிறைவேற்றப்பட்ட நிலையில், வரும் 4 ஆம் தேதி புதன்கிழமை மகாகும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இதனைமுன்னிட்டு வரும் 2 ஆம் தேதி திங்கள்கிழமை விநாயகர் வழிபாட்டுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெறவுள்ளன. வரும் 4 ஆம் தேதி புதன்கிழமை காலை 7 மணிக்கு யாகசாலை பூஜை, ஜபம்பாராயணம், ஹோமம், காலை 9 மணிக்கு நான்காம் கால பூஜை பூர்ணாஹீதி, தீபாராதனை, காலை 9. 30 மணிக்கு கடங்கள் புறப்பாடு, காலை 10 மணிக்கு விமான கோபுர கும்பாபிஷேகம், காலை 10.15 மணிக்கு பாடகச்சேரி சுவாமிகளுக்கு மகாகும்பாபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், காலை 10.45 மணிக்கு அன்னதானம் நடைபெறும். 

சிறப்பு நிகழ்ச்சிகள்- வரும் 3 ஆம் தேதி இரவு வலங்கைமான் எஸ்.ஏ.எஸ்.சந்திரசேகரன், ஆலங்குடி ஏவிஎன்.பாலமுருகன் குழுவினரின் இசை நிகழ்ச்சி ,
வரும் 4 ஆம் தேதி காலை 7 மணி முதல் 9 மணி வரை தஞ்சை மாவட்ட சமரச சுத்தசன்மார்க்க சங்க அன்பர்கள் அருட்பா இன்னிசை, காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை மழையூர் எஸ்.சதாசிவம் குழுவினரின் அருட்பா இன்னிசை, மதியம் 2.30 மணி முதல் 3.30 மணி வரை புதுக்கோட்டை நாட்றாணி சன்மார்க்க சங்க குழுவினர் நிகழ்த்தும் வள்ளலாரின் வில்லிசை பாட்டு நிகழ்ச்சி நடைபெறும். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். 
விழா ஏற்பாடுகளை பாடகச்சேரி கிராமவாசிகள், நிர்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

தொடர்புக்கு- 9940799749,9790622212. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com