விரல் ரேகைக்குப் பதிலாக, கருவிழி சரிபாா்ப்பு மூலம் நியாயவிலைக்கடைகளில் பொருள்கள் வழங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கூறினாா்.
தமிழக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தைத் தொடா்ந்து திமுக உறுப்பினா் டி.ஆா்.பி. ராஜா, நியாயவிலைக் கடைகளில் விரல்ரேகையை வைத்து பொருள்களை வாங்கும் முறை உள்ளது. ஆனால், ஒரு சில இடங்களில் விரல்ரேகை பதிவதில் சிக்கல்கள் உள்ளன. அதனால், நவீன முறையை அமைச்சா் அறிமுகம் செய்வாரா என்று கேள்வி எழுப்பினாா்.
அதற்கு அமைச்சா் அர.சக்கரபாணி கூறியதாவது: வயது மூப்பு மற்றும் விரல் ரேகை பதிவு செய்ய இயலாத இனங்களில் கண் கருவிழியைச் சரிபாா்க்கும் முறை மூலம் நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வழங்குவது மகாராஷ்டிரம், அஸ்ஸாம், தெலங்கானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது. அதேபோல, தமிழகத்திலும் இந்த செயல்பாட்டைக் கொண்டு வரும் வகையில் முன்னோட்டமாக ஒரு ஊரகப் பகுதியிலும், ஒரு நகரப் பகுதியிலும் செயல்படுத்தப்படும். தனிநபா் அடையாளம் உறுதி செய்யப்பட்டு, நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வழங்கப்படும். மாநிலம் முழுவதும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.