
முதல்வர் மு.க.ஸ்டாலின்
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்ததாக பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில், பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தது குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப் பெருந்தகை விளக்கம் கேட்டார்.
தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த விளக்கம்:
கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி கூட்டம் நடத்தினார். அப்போது, பெட்ரோல், டீசல் விலையை குறிப்பிட்டு சில மாநிலங்கள் குறைப்பதற்கான வழிவகையை காணவில்லை என கருத்து தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் விலை குறைவுக்கு மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு சில மாநிலங்கள் ஒத்துழைக்கவில்லை என்றும், பெட்ரோல், டீசலுக்கு மாநில அரசு விதிக்கும் வரியை குறைக்காததால்தான் நாட்டில் விலையை குறைக்க முடியவில்லை எனக் குறிப்பிட்டார்.
இதைப் பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால், முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் கருத்து தெரிவித்துள்ளார். 2014இல் ஆட்சிக்கு வந்தபோது கச்சா எண்ணெய்யின் விலை பெருமளவில் சரிந்தாலும், அதற்கேற்றது போல் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல், அதன் உபரி வருவாய் முழுவதையும் மத்திய அரசு தனதாக்கி கொண்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை மீது விதிக்கப்படும் கலால் வரியானது மாநில அரசுகளுக்கு பகிர்ந்து அளிக்கக் கூடியது என்ற காரணத்தால், அதை குறைத்து மாநில அரசுகள் வருவாயில் கை வைத்தது மத்திய அரசு. பிற வரிகளை மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்க தேவையில்லை என்பதால், அதை கடுமையாக உயர்த்தி மக்களுக்கு சுமையை ஏற்படுத்தி அதில் கிடைக்கும் வருவாயை தனதாக்கி கொண்டது மத்திய அரசு.
சில மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்பதற்காக விலையை குறைத்து மத்திய அரசு வேடம் போட்டது. மாநில அரசுகள் தேர்தல் முடிந்த பிறகு வேகமாக உயர்த்தியுள்ளது.
ஆனால், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல, பெட்ரோல் மீதான மாநில வரியை தமிழக அரசு குறைத்தது. இது அனைத்தும் தமிழக மக்களுக்கு தெரியும்.