பெண் ஆசிரியை மீது மாணவிகள் தாக்குதல்: பள்ளிக்கு செல்ல ஆசிரியர்கள் மறுப்பு; வகுப்புகள் பாதிப்பு

திண்டுக்கல் அருகே பெண் ஆசிரியை மீது தாக்குதல் நடத்திய மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோ.ராமநாதபுரம் பள்ளிக்கு செல்ல  மறுத்த ஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பள்ளிக்கு முன்பாக பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டுள்ள எரியோடு போலீஸார்.
பள்ளிக்கு முன்பாக பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டுள்ள எரியோடு போலீஸார்.

திண்டுக்கல் அருகே பெண் ஆசிரியை மீது தாக்குதல் நடத்திய மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோ.ராமநாதபுரம் பள்ளிக்கு செல்ல  மறுத்த ஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

திண்டுக்கல் மாவட்டம், கோவிலூர் அடுத்துள்ள ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில், கோவிலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1200 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 40ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், 2021-22 கல்வி ஆண்டின் தொடக்கத்தில், பெற்றோர்  ஆசிரியர் கழக நிதிக்கான கட்டணம் தொடர்பாக மாணவர்களை அப்பள்ளியில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர் முனியப்பன் தூண்டிவிட்டதாக புகார் எழுந்தது.

அதன்பேரில், புதன்கிழமை காலை பள்ளி செயல்படத் தொடங்கியதும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களில் ஒரு பிரிவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது 11 ஆம் வகுப்பிற்குள் நுழைந்து அங்கிருந்த மாணவிகளை மறியல் போராட்டத்திற்கு வருமாறு சில மாணவிகள் வற்புறுத்தியுள்ளனர். அந்த வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த பெண் ஆசிரியர், இதனை கண்டித்துள்ளார்.  ஆத்திரமடைந்த மாணவிகள் 5 பேர் அந்த  ஆசிரியரை அடித்ததாக கூறப்படுகிறது.

அதிர்ச்சி அடைந்த அந்த ஆசிரியை அழுதுகொண்டே தலைமையாசிரியரிடம் புகார் அளித்துள்ளார். மாணவர்களின் மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்த எரியோடு போலீஸார், சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

முதன்மை கல்வி அலுவலர் முற்றுகை: பள்ளி முடிந்த பின், கோ.ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சீ.கருப்புசாமியை சந்தித்து புதன்கிழமை மாலை முறையிட்டனர். அப்போது இந்த பிரச்னைக்கு காரணமான உடற்கல்வி ஆசிரியர் முனியப்பனை பணியிட மாற்றம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். மாணவிகள் மூலம் பாலியல் புகார் அளித்துவிடுவதாக ஆசிரியர்களையும், பெண் ஆசிரியர்களின் உறவினர்களை கொலை செய்துவிடுவதாகவும், வன்கொடுமை  சட்டத்தின் கீழ் புகார் அளித்துவிடுவதாகவும் முனியப்பன் மிரட்டுவதாக புகார் அளித்தனர்.

அந்த பள்ளியிலிருந்து முனியப்பனை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். அதேபோல்  ஆசிரியையை தாக்கிய 5 மாணவிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் நாங்கள் பள்ளிக்கு செல்லமாட்டோம் என தெரிவித்தனர். 

இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமாக மனு அளிக்கும்படி முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தினார். அதன்பேரில், ஆசிரியர்கள் அனைவரும் தனித் தனியே புகார் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.

நடவடிக்கை இல்லாததால் பள்ளிக்கு செல்ல மறுப்பு: வியாழக்கிழமை காலை வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், பள்ளிக்கு செல்ல மறுத்த ஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பள்ளியின் தலைமையாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் முனியப்பன் உள்ளிட்ட 4 ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு சென்றனர். இதையடுத்து, எரியோடு போலீஸார் பள்ளிக்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வகுப்புகள் பாதிப்பு: 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தலைமையாசிரியர் அதற்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து தேர்வுகளை நடத்தினார். பிற வகுப்புகளில் முற்பகல் பள்ளி நேரம் முழுமையாக பாதிக்கப்பட்டது. இதனிடையே மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சீ.கருப்புசாமி நடத்திய பேச்சுவார்த்தையில், ஆசிரியரை தாக்கிய மாணவியை இடைநீக்கம்(சஸ்பெண்ட்) செய்வதாகவும், போராட்டத்தை தூண்டிவிட்ட உடற்கல்வி ஆசிரியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். 

அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்து 31 கி.மீட்டர் தொலைவிலுள்ள கோ.ராமநாதபுரம் பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இதனிடையே பிரச்னைக்குரிய உடற்கல்வி ஆசிரியர் வெ.முனியப்பனை, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ள லிங்கவாடி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சீ.கருப்புசாமி வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com