
சென்னை ஐஐடியில் அரசு நிகழ்ச்சியின்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற 58 ஆவது பட்டமளிப்பு விழாவில் தமிழ்தாய் வாழ்த்து புறக்கணிப்பட்டது சர்ச்சையானது.
இதையடுத்து உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி ஐஐடி நிறுவனத்தின் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு அரசு தான் 1959 ஆம் ஆண்டு ஐஐடி நிர்வாகத்திற்கு கல்லூரி அமைப்பதற்கு 250 ஹெக்டேர் இடம் வழங்கியது. அது முதல் ஐஐடிக்கு பல்வேறு உதவிகள், சலுகைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து செய்து வந்துள்ளது.
ஐஐடியில் அமையவுள்ள கிரையோ எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் அமைக்க ரூ.10 கோடி நிதியுதவி கேட்டு, உயர்கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு ஐஐடி நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது. இது தொடர்பாக பரீசிலனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஐஐடி பட்டமளிப்பு விழாவில் தமிழ்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது ஏமாற்றமடைய செய்துள்ளது. தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்து மத்திய அரசு, மாநில அரசு நிகழ்ச்சிகளிலும், பிரதமர், குடியரசு தலைவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளிலும் கூட தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது நீண்டநாள் மரபாக இருக்கும் போது, ஐஐடியில் நடைபெறும் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து வருங்காலத்தில் இடம்பெறுவதை கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், சென்னை ஐஐடியில் அரசு நிகழ்ச்சியின்போது, தேசிய கீதம், மற்றும் வந்தே மாதரத்துடன் தமிழ்த்தாய் வாழ்த்து பட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக விரைவில் சென்னை ஐஐடிக்கு அதிகாரபூர்வமான தகவல் தெரிவிக்கப்படும் என கல்வி அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | பெண் ஆசிரியை மீது மாணவிகள் தாக்குதல்: பள்ளிக்கு செல்ல ஆசிரியர்கள் மறுப்பு; வகுப்புகள் பாதிப்பு