திருச்சி: ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் சித்திரை தேர்த்திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுவதும், 108 வைணவத் தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த் திருவிழா 10 நாட்கள் வெகுசிறப்பாக நடைபெறும்.
இவ்வகையில் இந்த ஆண்டிற்கான சித்திரை தேர்த்திருவிழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் அதிகாலை 4.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு சித்திரைத் தேர் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார்.
பின்னர் அதிகாலை 6 மணிக்கு மேஷ லக்னத்தில் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
காலை 6.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. கீழச்சித்திரை வீதியிலிருந்து புறப்பட்டு தேர் தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி மற்றும் வடக்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து மீண்டும் நிலையை அடைகிறது.
இதையும் படிக்க | ஸ்ரீரங்கம் கோயில் தேரோட்டம் தொடங்கியது
தேரோட்டத்தை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.