மேட்டுப்பாளையம் அருகே மங்களக்கரைபுதூர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட வாழைகளை பாகுபலி காட்டு யானை சேதப்படுத்தியதால் விவாயிகள் கவலை அடைந்தனா்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் நெல்லிமலை உள்ளது. இப்பகுதியைச் சுற்றி குறும்பனூர், பஞ்சுக்காடு, சமயபுரம், பத்திரகாளியம்மன் கோயில் பகுதி, தேக்கம்பட்டி, கிட்டாம்பாளையம், மங்களக்கரைபுதூர், தாசம்பாளையம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது.
இந்நிலையில், மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதியில் நடமாடி வந்த பாகுபலி என மக்களால் அழைக்கப்படும் ஒற்றை காட்டு யானை கடந்த 3 நாள்களாக மேற்கண்ட பகுதியில் நடமாடி வருகிறது.
இதனிடையே நாள்தோறும் மாலை 7 மணிக்கு மேல் நெல்லிமலை பகுதியில் இருந்து குரும்பனூர் வழியாக வெளியே வரும் ஒற்றை காட்டுயானை விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்களை சேதப்படுத்தி செல்கிறது.
இதையொட்டி நேற்றிரவு வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை வனத்துறையினரை மீறி மங்களக்கரைபுதூர் பகுதியலுள்ள வாழை தோட்டத்திற்குள் நுழைந்தது. இதில் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த அறுவடைக்குத் தயாராக இருந்த கதலி, செவ்வாழை தோட்டங்களில் இருந்த 300க்கும் மேற்பட்ட வாழைகளை யானை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியதால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா். இதனால் விசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
எனவே, விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானையை விரைவில் வேறு பகுதியில் விரட்டி அடிக்கவும், வனப் பகுதியைவிட்டு வெளியேறுவதைத் தடுக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இதையும் படிக்க | சேலம்: ஆத்தூர் கோட்டையில் 12 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம்