சிவகாசியில் கொல்லம் ரயில் நின்று செல்லவில்லை என்றால், ரயில் மறியலில் ஈடுபடுவேன் என்று மக்களவையில் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவையில் மாணிக்கம் தாகூர் பேசியதாவது,
“சென்னை எழும்பூர் - கொல்லம் விரைவு ரயிலானது 2016 வரை சிவகாசியில் நின்று சென்றது. ஆனால், மோடி அரசு அமைந்த பிறகு நிற்பதில்லை. புதிய ரயில்களும் இல்லை, ஓடிக் கொண்டிருந்த ரயிலும் நிற்பதில்லை.
கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி அப்போதைய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து சிவகாசியில் கொல்லம் ரயில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அதே கோரிக்கையை, கடந்த ஏப்ரல் மாதம் தற்போதைய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து வைத்தேன். இன்று மக்களவையில் கோரிக்கை வைக்கின்றேன்.
இதையும் படிக்க | என்ன, பால் பாக்கெட் எடை குறைந்திருந்ததா? ஆவின் நிர்வாகம் விளக்கம்
இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால், வருகின்ற செப்டம்பர் 22ஆம் தேதி சிவகாசியில் நானே முன்னின்று ரயில் மறியலில் ஈடுபடுவேன். வேறு வழியில்லை” எனத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.