சென்னையில் பொது இடங்கள் மற்றும் நடைபாதைகளில் கட்டப்பட்டிருந்த 1,087 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்குட்பட்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பொது இடங்களில் கொட்டப்படும் கட்டடக் கழிவுகளை அகற்றுதல், மழைநீா் வடிகாலில் இணைக்கப்பட்டுள்ள கழிவுநீா் இணைப்புகளை துண்டித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மண்டலத்துக்கும் பறக்கும் படைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினரால் புதன்கிழமை(ஆக.3) வரை மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 15 மண்டலங்களில் 113 நிரந்தர கட்டுமானங்களுடன் கூடிய ஆக்கிரமிப்புகள் மற்றும் 974 தற்காலிக கூடாரங்கள் போன்ற ஆக்கிரமிப்புகள் என மொத்தம் 1,087 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, 902 மெட்ரிக் டன் அளவிலான கட்டடக் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மழைநீா் வடிகால்களிலிருந்து 487 கழிவுநீா் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.