
மணல் மூட்டைகள் கொண்டு தடுப்பு சுவரில் ஏற்பட்ட பள்ளங்களை அடைக்கும் பணியில் தொழிலாளர்கள்.
சீர்காழி அருகே கொள்ளிடம் வழியே 2.25 லட்சம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படவுள்ள நிலையில் ஆற்றின் கரையோர கிராமமான அளக்குடியில் கரைகள் பலப்படுத்தும் பணிகள் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. தொடர்ந்து அணைக்கு வரும் நீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இரண்டு லட்சம் கன அடி தண்ணீர் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | அரசு ஊழியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் பதவி உயர்வு: தலைமைச் செயலாளர் உத்தரவு
கடந்த 2018 ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது அளக்குடியில் உடைப்பு ஏற்பட்ட நிலையில் அப்பகுதியில் தற்போது முன் எச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தடுப்பு சுவரில் ஏற்பட்ட பள்ளங்கள் அடைக்கும் பணியை பார்வையிடும் பொதுப்பணித்துறை காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், உதவி பொறியாளர் சிவசங்கர்.
முதல் கட்டமாக பொதுப்பணித்துறை சார்பில் 3000 மணல் மூட்டைகள் கொண்டு தடுப்பு சுவரில் ஏற்பட்ட பள்ளங்கள் அடைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. மேலும் 300 சவுக்கு கட்டைகளும் அடைக்கும் பணியில் பயன்படுத்தப்படுகிறது.
பொதுப்பணித்துறை காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், உதவி பொறியாளர் சிவசங்கர் பார்வையிட்டனர்.