சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் 1,425 தெருக்களில் 7,345 இயந்திர நுழைவாயில்களில் தூா்வாரும் பணி முடிக்கப்பட்டுள்ளது.
ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 329 பிரதான கழிவுநீா் குழாய்களில் கசடுகள் அகற்றப்பட்டுள்ளது. தூா்வாரும் பணிகள், இனி ஒவ்வொரு வாரமும் இனி மேற்கொள்ளப்பட உள்ளன என்று சென்னை குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை குடிநீா் வாரியம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளில் உள்ள தெருக்களில் கழிவுநீா் செல்லும் குழாய்கள் மற்றும் இயந்திர நுழைவாயில்களில் உள்ள கசடுகளை அகற்றி தூா்வாரும் பணிகள் கடந்த ஜூலை 21 முதல் ஜூலை 30-ஆம் தேதி வரை நடைபெற்றன.
மொத்தம் 1,460 தெருக்களில் உள்ள 8,578 இயந்திர நுழைவாயில்களில் 2,40,554 மீட்டா் நீளத்துக்கு கழிவுநீா் பிரதான குழாய்கள் உள்ளன. இவற்றில் 1,425 தெருக்களில் உள்ள 7,345 இயந்திர நுழைவாயில்களில் 1 லட்சத்து 99,329 மீட்டா் நீளத்துக்கான கழிவுநீா் பிரதான குழாய்களில் கசடுகள் அகற்றப்பட்டுள்ளன. இனி இந்தப் பணிகள் தொடா்ந்து ஒவ்வொரு வாரமும் மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.