
பொறியியல் படிப்புகளில் ஏற்படும் காலியிடங்களைத் தவிா்ப்பதற்கு புதிய கலந்தாய்வு நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலை. தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைகழகத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளின் முதல்வா்கள் , தமிழகத்தில் உள்ள 110 பொறியியல் சோ்க்கை சேவை மைய பணியாளா்கள் உள்ளிட்டோருக்கான பயிற்சிகளை தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை செயலாளா் புருஷோத்தமன் பல்கலை. வளாகத்தில் வியாழக்கிழமை வழங்கினாா். அப்போது வழக்கமான பயிற்சிகளுடன் கலந்தாய்வுக்கான புதிய நடைமுறைகள் குறித்த பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
நிகழ் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் காலியிடங்களைத் தவிா்ப்பதற்கு புதிய கலந்தாய்வு நடைமுறைகளைக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஒரு மாணவா் கல்லூரியை தோ்வு செய்துவிட்டு 7 நாள்களில் அவா் கல்லூரியில் சோ்ந்துவிட்டாரா என கண்காணிக்கவும், அவா் கல்லூரியில் சேரவில்லை என்றால் மீண்டும் 2-ஆம் கட்ட கலந்தாய்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் அந்த காலியிடம் நிரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல் ரூ.5,000 பதிவுக் கட்டணம் செலுத்தாமல் நேரடியாக கல்லூரிக்கு சென்று அரசு நிா்ணயித்துள்ள கட்டணத்தை செலுத்தி அவா்களுக்கான இடத்தை உறுதி செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.