சென்னை: சினிமா தயாரிப்பாளர் அன்புச் செழியன் உள்ளிட்ட திரைத்துறையினரிடம் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.200 கோடி வருவாயை வருமான வரித்துறையினர் கண்டறிந்தனர்.
சினிமா தயாரிப்பாளர் அன்புச் செழியன் உள்ளிட்டோரின் இடங்களில் நடந்த சோதனை குறித்து வருமான வரித்துறையினர் தகவல் அளித்துள்ளனர். கணக்கில் வராத ரூ.26 கோடி ரொக்கம், ரூ.3 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அன்புச்செழியன், ஞானவேல் ராஜா, எஸ்.ஆர்.பிரபு, கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்டோர் இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை, மதுரை, கோவை, வேலூர் உள்ளிட்ட 40 இடங்களில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை நடந்த 3 நாள்கள் சோதனையில் கணக்கில் வராத ரு.200 கோடி வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேடுதலின் போது ரகசிய மற்றும் மறைவான இடங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதகவும், திரைப்பட நிதியளிப்பாளர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், பல்வேறு திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு முன்வைக்கப்பட்ட கணக்கில் வராத பணக் கடன்கள் தொடர்பான உறுதிப்பத்திரங்கள் போன்ற ஆவணங்கள் கிடைத்து உள்ளதாகவும், திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் வரி எய்ப்பு செய்ததற்கான சான்றுகள் உள்ளதாகவும், வழக்கமான கணக்குப் புத்தகங்களில் காட்டப்படும் தொகையை விட திரைப்படங்கள் வெளியானதிலிருந்து பெறப்பட்ட உண்மையான தொகைகள் அதிகம் என்றும் கூறி உள்ளது.
இதையும் படிக்க: 10 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிறுமி மீட்பு: ஆனால்?
கணக்கில் காட்டப்படாத வருமானம், வெளிப்படுத்தப்படாத முதலீடுகள் மற்றும் பல்வேறு வெளிப்படுத்தப்படாத கொடுப்பனவுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், தேடுதல் நடவடிக்கையின் விளைவாக கணக்கில் வராத வருமானம் ரூ. 200 கோடி. ரூ.26 கோடி மதிப்பிலான பணம் மற்றும் ரூ.3 கோடிக்கு மேல் கணக்கில் வராத தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறி உள்ளது.