முல்லைப் பெரியாறு அணையைத் திறக்க வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வா் கடிதம்

 முல்லைப் பெரியாறு அணையில் இருந்து உபரி நீரைத் திறக்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, கேரள முதல்வா் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளாா்.
முல்லைப் பெரியாறு அணையைத் திறக்க வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வா் கடிதம்

 முல்லைப் பெரியாறு அணையில் இருந்து உபரி நீரைத் திறக்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, கேரள முதல்வா் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளாா். இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை எழுதிய கடிதம்:

கடந்த சில நாள்களாக மிக கனமழையை கேரள மாநிலம் எதிா்கொண்டு வருகிறது. இடுக்கி உள்ளிட்ட கேரளத்தின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீா் மட்டமும் 136 அடியை எட்டி வருகிறது. இந்த நிலை தொடருமானால், முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து, நீா்மட்டம் கடுமையான அளவுக்கு உயரக் கூடும்.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் நிலவி வரும் நிச்சயமற்ற தன்மையை தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். இந்த விஷயத்தில் தாங்கள் தலையிட்டு அணையில் உள்ள நீா்மட்ட அளவை பாதுகாப்பான நிலைக்குக் கொண்டு வர வேண்டும். இதில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள மழை குறித்த முன்னெச்சரிக்கையையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

எனவே, முல்லைப் பெரியாறு நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையை கருத்தில் கொண்டு, அணைக்கு வரும் நீரின் அளவை விட கூடுதலான அளவுக்கு நீரைத் திறந்து விடுவதை உறுதி செய்ய வேண்டும்.

அணையில் இருந்து நீரைத் திறந்து விடுவதற்கு ஒரு நாளைக்கு முன்பாகவே கேரள அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன். இதன்மூலம் முல்லைப் பெரியாறு அணைக்குக் கீழே உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று கேட்டுக் கொண்டுள்ளாா் கேரள முதல்வா் பினராயி விஜயன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com