செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பாக ஆடிய வீரர்களுக்கும், அணிகளுக்கும் பதக்கங்கள், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. போட்டியில் வெற்றி பெற்றவர்களை விட நான் அதிக மகிழ்ச்சியில் உள்ளேன்.
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ரூ.102 கோடி ஒதுக்கி 18 துணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டன. அதற்குள் முடிந்துவிட்டதா என்று ஏங்கும் அளவிற்கு செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த அமைச்சர் மெய்யநாதன், உள்ளிட்ட அதிகாரிகளுக்கு வாழ்த்துகள். பாராட்டுகள். சர்வதேச கடற்கரை போட்டிகளை நடத்தவும் தமிழ்நாடு தயாராகவுள்ளது.
உலக நாடுகள் மத்தியில் தமிழகத்தின் மதிப்பு உயரும் என முன்பே நான் கூறியிருந்தேன். நவீன தேவைக்கு ஏற்ப விளையாட்டு உள்கட்டமைப்பை புதுப்பிக்கவுள்ளோம்.
சென்னையில் தங்கியிருந்த நாள்களை வீரர்கள், பயிற்சியாளர்கள் நிச்சயம் மறக்கமாட்டார்கள் என நம்புகிறேன்.
தமிழகத்தின் கலாசாரம், வரலாறு, குறிப்பாக உணவு ஆகியவற்றை ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். அனைத்து வீரர்களும் அடிக்கடி சென்னை வர வேண்டும். சென்னைய மறக்க வேண்டாம். இங்கு உங்களுக்கு சகோதர, சகோதரிகள் உள்ளனர் எனக் குறிப்பிட்டார்.