மதுபோதையில் மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் மேச்சேரியில் கைது செய்தனர்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காகவும் 20 மாவட்டங்களுக்கு குடிநீருக்காகவும் தண்ணீர் வழங்குகிறது மேட்டூர் அணை. தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் மேட்டூர் அணைக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் வரும். போலீசார் மேட்டூர் அணையில் வெடிகுண்டு சோதனை நடத்துவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதும் நடந்து வந்தது. அதன் பிறகு முன்னாள் ராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மேட்டூர் அணை பூங்கா பல ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்தது.
பின்னர் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மேட்டூரில் இருந்து சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், மேட்டூர் அணையில் வெடிகுண்டு வெடிக்கும் என கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளார். நேற்று இரவு 9 மணி அளவில் வெடிகுண்டு நிபுணர்கள், காவல்துறை மோப்ப நாய் மற்றும் அதிரடிப் படையினர் மேட்டூர் அணை பூங்கா அணையின் வலது கரை உள்ளிட்ட பகுதிகளில் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர்.
இதையும் படிக்க- லக்கிம்பூர்: முடிவுக்கு வந்த விவசாயிகள் போராட்டம்
மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். மக்கள் எளிதில் சென்று வரும் இடங்களில் கண்காணிப்பை தீவிரப் படுத்த உத்தரவிட்டனர். இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் மேட்டூர் அருகே நவப்பட்டியில் இருந்து செல்போன் பேசியது தெரியவந்தது. இதையடுத்து சம்மந்தப்பட்ட நபரை மேச்சேரியில் காவல்துறையினர் இன்று கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் மகாலிங்கம்(57) என்பதும் அவர் மதுபோதையில் மிரட்டல் விடுத்து இருந்ததும் தெரியவந்தது.
மகாலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.