மத்திய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா பதவி விலகல், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி லக்கிம்பூரில் நடைபெற்று வந்த விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
இதனை சம்யுக்தா கிஷான் மோர்ச்சா தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் விவசாயிகளை சந்தித்துப் பேசியதைடுத்து இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
விவசாயிகளிடம் பேசிய சம்யுக்தா கிஷான் மோர்ச்சா தலைவர் ராகேஷ் திகைத் கூறியதாவது: “ சம்யுக்தா கிஷான் மோர்ச்சாவின் எதிர்கால யுக்தி குறித்து வருகிற செப்டம்பர் 6ஆம் தேதி தில்லியில் நடைபெற உள்ள கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். மாவட்ட நீதிபதி மகேந்திர பகதூர் மற்றும் அதிகாரிகள் தர்னா நடைபெறும் இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேசினர். அவர்கள் விவசாயிகள் மற்றும் அரசுக்கு இடையேயான கூட்டம் செப்டம்பர் முதல் வாரத்தில் நடத்த ஏற்பாடு செய்து தரப்படும் என உறுதியளித்தனர். அதனால் விவசாயிகளின் இந்த 75 மணி நேர போராட்டம் முடிவுக்கு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த விவசாயிகளுடன் போராட்டம் கடந்த புதன்கிழமை அன்றே தொடங்கி விட்டது. போராட்டக்காரர்கள் பலர் இன்று (ஆகஸ்ட் 20) இரவு அவர்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்புகின்றனர்.” என்றார்.
இதையும் படிக்க: தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' - இரண்டு நாட்களில் இவ்வளவு வசூலா?
முன்னதாக சம்யுக்தா கிஷான் மோர்ச்சா சார்பில் லக்கிம்பூரின் ராஜபூர் மண்டியில், மத்திய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா பதவி விலகல், அப்பாவி விசாயிகளை சிறையிலிருந்து விடுவிப்பது, குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய சட்டம் ஏற்றுவது, புதிய மின்சார சட்டத்திருத்தம் 2022 மசோதாவினை கைவிடுவது, கரும்பு விவசாயிகளின் மீதிப் பணத்தினை வழங்குவது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தர்னாவில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.