பல்கலை கழக துணை வேந்தர்கள் நியமனத்தை, மாநில அரசே மேற்கொள்ளும் சட்ட வரைவிற்கு ஒப்புதல் அளிக்க மறுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி அடம் பிடிப்பதாக மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட தனக்கு அதீத அதிகாரங்கள் இருப்பதாக காட்டிக்கொள்ளும் அடாவடித்தனத்தின் தொடர்ச்சியே இது. உயர்கல்வி நிறுவனங்களை ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக்குவதும், மாநில அரசின் கொள்கைக்கு மாறாக புதிய கல்விக் கொள்கையை திணிக்கவும் தொடர்ந்து முயற்சிக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்த பின்ன்ணியில்தான் மாநில அரசுக்கு புதிய சட்டம் நிறைவேற்றிடும் தேவை எழுந்தது. எனவே, ஆளுநர் தனது நாடகத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அதிகாரத்தை குறுக்கு வழியில் பறிக்க முயற்சிக்கும் ஒன்றிய ஆட்சியாளர்களின் தொடர் கொட்டத்தை சி.பி.ஐ(எம்) வன்மையாக கண்டிக்கிறது. மாநில அரசின் சட்டத்திற்கு உடனே அனுமதியளிக்க வேண்டுமென வற்புறுத்துகிறோம்” என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.