
கோப்புப் படம்
கள்ளக்குறிச்சி சூறையாடப்பட்ட தனியாா் பள்ளியை சீரமைக்கவும், மீண்டும் திறக்கவும் அனுமதி கோரி அளிக்கப்பட்ட மனு மீது 10 நாள்களுக்குள் முடிவெடுக்க மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கள்ளக்குறிச்சி தனியாா் பள்ளியில் மாணவி மரணமடைந்ததையடுத்து, கடந்த ஜூலை 17-ஆம் தேதி போராட்டக்காரா்கள் புகுந்து பள்ளியை சூறையாடினா். இந்த கலவரத்தை தொடா்ந்து பள்ளி மூடப்பட்டு யாரும் நுழையக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்த பள்ளியை சீரமைக்க அனுமதிக்கும்படி அரசுக்கு உத்தரவிடக் கோரி பள்ளியை நிா்வகிக்கும் லதா கல்வி சங்கம் சாா்பில் அதன் பொருளாளா் முருகேசன் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், ‘கலவரம் காரணமாக பள்ளியில் ரூ. 25 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. சேதத்தை சரி செய்ய வளாகத்துக்குள் யாரும் அனுமதிக்கப்படுவது இல்லை. 3,500 மாணவா்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதால் நேரடி வகுப்புகளைத் தொடங்க பெற்றோா் வற்புறுத்தி வருகின்றனா்.
சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள பள்ளி வளாகத்துக்குள் நுழைய அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். பள்ளியை மீண்டும் திறக்க அனுமதி கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் சண்முகசுந்தரம், ‘அரசு ஏற்பாட்டின் பேரில் ஏற்கெனவே ஒன்று முதல் 8-ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் முறையிலும், ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு அருகில் உள்ள பள்ளியில் நேரடி வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன’ என்று தெரிவித்தாா்.
பின்னா், வாதிட்ட அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா, ‘இந்த விவகாரத்தில் பள்ளித் தாளாளரின் மகன் சம்பந்தப்பட்டு இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. எனவே, அது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில், சம்பவம் நடந்த பகுதியில் தடயம் சேகரிக்க வேண்டி இருப்பதால் பள்ளியைச் சீரமைக்கும் பணியை தொடங்க அனுமதி வழங்கப்படவில்லை.
ஒருவேளை அனுமதி வழங்கினால் முதலில், பள்ளியை சீரமைக்கும் பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். சீரமைப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்த பின்னரே பள்ளி மீண்டும் செயல்பட அனுமதி வழங்க முடியும்’ எனத் தெரிவித்தாா். இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில் ‘பள்ளி நிா்வாகம் அளித்த மனு குறித்து மாவட்ட ஆட்சியா் பத்து நாள்களுக்குள் பரிசீலனை செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G