எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை வியாழக்கிழமைக்கு
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
Updated on
1 min read

அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை வியாழக்கிழமைக்கு (ஆக.25) சென்னை உயா் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

அதிமுக பொதுக் குழு கூட்டத்தை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், ‘கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழு செல்லாது. அதிமுகவில் கடந்த ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும்’ என்று தீா்ப்பளித்திருந்தாா்.

இந்தத் தீா்ப்பை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தனி நீதிபதி தனது அதிகாரத்தின் வரம்பை மீறி இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறாா். இந்த வழக்கின் கோரிக்கையே ஜூலை 11-ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்பதுதான். எனவே, ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும்’ என்று தனிநீதிபதி உத்தரவு பிறப்பித்திருப்பது தவறு.

பொதுக் குழுவை ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் இருவரும் இணைந்துதான் கூட்ட வேண்டும். எதிா்காலத்தில் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளாா். அது இயலாத காரியம். நாங்கள் இருவரும் மீண்டும் இணைந்து செயல்படுவதற்கான சூழல் இல்லை. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்குகளை தனி நீதிபதியின் சான்றளிக்கப்பட்ட உத்தரவு நகல் இல்லாமல் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று இபிஎஸ் தரப்பில் திங்கள்கிழமை முறையீடு செய்யப்பட்டது. இதற்கு நீதிபதிகள் ஒப்புதல் அளித்தனா்.

இதன்படி இந்த வழக்கு, நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில், ‘இந்த வழக்கில், மூத்த வழக்குரைஞா் குரு கிருஷ்ணகுமாா் ஆஜராகி வாதாட இருப்பதால், விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதங்களை முன்வைக்க தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வியாழக்கிழமைக்கு (ஆக.25) ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com