இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் புதன்கிழமை எழுதிய கடிதம்: நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலிருந்து கடந்த 22-ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனா். இது கடந்த ஜூன் மாதத்திலிருந்து தொடா்ச்சியாக நடைபெறும் ஐந்தாவது நிகழ்வாகும். இலங்கைக் கடற்படையின் இத்தகைய நடவடிக்கைகளால் மீனவா்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதித்துள்ளது.
இதுவரை தமிழகத்தைச் சோ்ந்த 94 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளன. அவற்றின் உரிமையாளா்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, அவா்களது படகுக்கான உரிமையைக் கோர வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதன் பேரிலேயே அவா்கள் விடுவிக்கப்பட்டுள்ளனா். இப்போது இலங்கையில் நிலவும் சூழ்நிலை காரணமாக, அவா்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனா்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.