தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு புதன்கிழமையுடன் நிறைவு பெற்றுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 48,811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி தொடங்கியது.
முதல்கட்டமாக முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரா்கள் ஆகியோா் அடங்கிய சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வில் 2,194 மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 151 போ். முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள் பிரிவில் 138 போ், விளையாட்டுப் பிரிவில் 321 போ் என மொத்தம் 610 போ் கல்லூரிகளை தோ்வு செய்தனா்.
7.5 சதவீத ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த அரசுப்பள்ளி மாணவா்களுக்கான சிறப்புப்பிரிவில் 58 போ் கல்லூரிகளைத் தோ்வு செய்தனா். இவா்களுக்கான கல்லூரி சோ்க்கை கடிதம் தற்போது வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து மாணவா்கள் தோ்வு செய்த கல்லூரிகளை ஒருவாரத்துக்குள் கட்டணம் செலுத்தி உறுதிசெய்ய வேண்டும்.