மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கன்னார் தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பொங்கல், பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
வீர சைவ சமூகத்தினர் சார்பில் நடைபெறும் இவ் விழாவை முன்னிட்டு கனீனார்தெரு பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்ற கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டி விரதம் தொடங்கினர். காப்பு கட்டிய நாள் முதல் தினமும் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற பால்குடம் உற்சவத்தை முன்னிட்டு காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த பக்தர்கள் மானாமதுரை வைகையாற்றிலிருந்து கரகம், தீச்சட்டிகள், பால்குடங்கள் சுமந்து மேளதாளத்துடன் வாணவேடிக்கை முழங்க ஊர்வலமாக கன்னார்தொரு மாரியம்மன் கோயிலுக்கு வந்தனர்.
கன்னார்தெரு மாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் மானாமதுரை வைகையாற்றிலிருந்து கரகம், தீச்சட்டிகள், பால்குடங்கள் சுமந்து வந்து வேண்டுதல் நிறைவேற்றினர்.
இதையும் படிக்க | நெல்லையப்பர் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
அதன்பின்னர் மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்து மாரியம்மனை தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை வீர சைவ சமூகத்தினர் செய்திருந்தனர்.
பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இரவில் ஜொலிக்கிறது. விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக பூத்தட்டு ஊர்வலம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.