நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆவணி மூலத்திருவிழா வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது
நெல்லை மாவட்டம் மிகவும் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆவணி மூலத் திருவிழா வெகு விமரிசையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆண்டிற்கு 12 மாதமும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, ஆவணி மாதம் வரக்கூடிய மூலத் திருநாள் அன்று சுவாமி நெல்லையப்பர் கருவூர் சித்தருக்கு நெல்லை மாவட்டம் மானூர் சென்று காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். 11 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான கொடியேற்ற விழா நெல்லையப்பர் கோயில் உள்ளே அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்த நிகழ்ச்சிக்காக அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் கஜபூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து திருக்கொடி பல்லக்கில் வைக்கப்பட்டு கோயில் பிரகாரத்தில் வலம் வர எடுத்துவரப்பட்டு சுவாமி சன்னதி முன் மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
பின்னர், வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. 16 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இத்திருவிழா 11 நாட்கள் நடைபெறும். 4ம் திருவிழாவான 29 ஆம் தேதி அன்று சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வான கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி செப். 5 ஆம் தேதி மானூரில் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.